Monday 17 March 2008

குழந்தைகள் கடவுளுக்கு எழுதியவை

குழந்தைகள் கடவுளுக்கு எழுதிய கடிதங்கள். கீழேயே தமிழில் தந்துள்ளேன். மழலை மொழியைச் சிதையாமல் பெயர்ப்பது கஷ்டம் என்பதால் விரும்புபவர்கள் அசலையே படித்துக்கொள்க. இந்தக் கள்ளங்கபடமற்ற வெள்ளை உள்ளத்தை வளரும்போது இழப்பதுதான் மனித வாழ்வின் மிகப் பெரிய சோகமாகப் படுகிறது. கூடவே இந்தப் பிஞ்சுக் குழந்தைகளைக் கடவுள் என்கிற கற்பிதத்தை நம்ப வைத்திருக்க வேண்டுமா என்றும் யோசிக்கலாம்.

அன்புள்ள கடவுளுக்கு, மனிதர்களைச் சாக விட்டுவிட்டு, புதுசா செய்யறதுக்குப் பதிலா இப்ப இருக்கவங்களையே வச்சுக்கிட்டா என்ன?
ஜேன்
அன்புள்ள கடவுளுக்கு, நான் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தேன். அவங்க சர்ச்சிலயே முத்தமிட்டுக்கொண்டார்கள். அது சரியா?
நீல்


அன்புள்ள கடவுளுக்கு, நான் நெனக்கிறேன், ஸ்டேப்ளர் கருவி உங்க கண்டுபிடிப்புகள்ளயே ரொம்பப் பெரிய விஷயங்கள்ல ஒன்னு.
ரூத் எம்.


அன்புள்ள கடவுளுக்கு, பைபிள் காலத்துல நெஜமாவே அப்படிதான் வினோதமாப் பேசிக்கிட்டாங்களா?
ஜெனிஃபர்



அன்புள்ள கடவுளுக்கு, நான் சிலசமயம் பிரார்த்தனை செய்யாதப்பக் கூட உங்களப் பத்தி நெனக்கிறேன்.
எலியட்


அன்புள்ள கடவுளுக்கு, நான் ஒரு அமெரிக்கன். ஆமா, நீங்க என்ன?
ராபர்ட்

அன்புள்ள கடவுளுக்கு, தம்பிப் பாப்பாவக் கொடுத்ததுக்கு நன்றி. ஆனா நான் கேட்டது நாய்க்குட்டிதான்.
ஜாய்ஸ்

அன்புள்ள கடவுளுக்கு, உலகத்துல இருக்க எல்லாரையும் நேசிக்கிறது உங்களுக்கு நிச்சயம் ரொம்பக் கஷ்டமாத்தான் இருக்கனும் சரியா? எங்க வீட்ல நாலே பேர்தான் இருக்கோம், என்னாலயே அது முடியல.
நேன்

அன்புள்ள கடவுளுக்கு, கொஞ்சம் கிறிஸ்மஸ்கும், ஈஸ்டருக்கும் நடுவில இன்னொரு விடுமுறை தாங்களேன். இப்ப அந்தச் சமயத்துல உருப்படியா ஒன்னும் இல்ல.
கின்னி



அன்புள்ள கடவுளுக்கு, வர்ர ஞாயித்துக்கிழமை சர்ச்சில என்னப் பார்த்திங்கன்னா என்னோட புது ஷூவைக் காட்டுவேன்.
மிக்கி டி.


அன்புள்ள கடவுளுக்கு, நாங்க திரும்பவும் பிறந்து வருவம்னா, என்ன ஜெனிஃபர் ஹார்ட்டனா ஆக்கிடாதே. எனக்கு அவளைப் பிடிக்காது.
டெனிஸ்

அன்புள்ள கடவுளுக்கு, பைபிள்ல வார அந்த ஆள் மாதிரி நானும் 900 வருஷம் வாழனும்.
க்ரிஸ்
அன்புள்ள கடவுளுக்கு, அலாவுதீன் மாதிரி எனக்கும் மந்திர விளக்கைக் குடுத்திங்கன்னா, நான் உங்களுக்கு எது வேணும்னாலும் தருவேன், என்னோட காசையும், செஸ் செட்டையும் தவிர.
ராபேல்
அன்புள்ள கடவுளுக்கு, தாமஸ் எடிசன்தான் லைட்டைக் கண்டுபுடிச்சார்னு படிச்சிருக்கோம். பைபிள் வகுப்புல நீங்க லைட்டை (ஒளியை) கண்டுபுடிச்சதா சொன்னாங்க. உங்க கண்டுபிடிப்பத்தான் அவர் திருடியிருக்கணும்.
டோன்னா.


அன்புள்ள கடவுளுக்கு, நீங்க மட்டும் டைனசார அழியவிட்டிருக்கலேன்னா எங்களுக்கு வசிக்க நாடே இருந்திருக்காது. நல்ல காரியம் செஞ்சிங்க.
ஜொனாதன்

அன்புள்ள கடவுளுக்கு, இந்த வருஷம் டென்னிஸை என்னோட காம்ப்புக்கு அனுப்பிடாதிங்க.
பீட்டர்.
அன்புள்ள கடவுளுக்கு, கெயினுக்கும், ஏபெலுக்கும் தனித்தனி அறை இருந்திருந்தா அவங்க ஒருத்தர ஒருத்தர் கொல்ற அளவுக்குப் போயிருக்க மாட்டாங்க. நானும், தம்பியும் அப்படித்தான் சண்டை போடாம இருக்கோம்.
லேரி
இப்ப உங்கள் முறை: உங்கள் கருத்துகளை மறுமொழியாக!

20 comments:

மாதங்கி said...

அற்புதம்

Anonymous said...

Good one..

மு. மயூரன் said...

பெரியவர்கள் செய்யும் கடவுள் மறுப்புக்கும் குழந்தைகைன் கடவுள் மறுப்புக்கும் இடையில்தான் எவளவு வித்தியாசம்?

குழந்தைகள் கடவுளின் முகத்தில் விட்டிருக்கும் இந்த அறை கடவுளின் அலறலை எங்கள் காதுகளில் ஒலிக்கச்செகின்றது.

எவ்வளவு தூரத்துக்கு நாம் எம் குழந்தைகளை கடவுளை வைத்துக்கொண்டு ஏமாற்றியிருக்கிறோம் பார்த்தீர்களா?

பாச மலர் / Paasa Malar said...

அருமையான மொழிகள்..மழலை என்றாலும் எவ்வளவு அர்த்தமான மொழிகள் பேசுகின்ரனர்..வளர வளர நாம்தான் கெடுத்து விடுகிறோம்.

Anonymous said...

ஒரு நிமிஷம் அப்படியே ஆடிப்போய்ட்டேன்... பேச்சே வரலை... அற்புதம்... எங்க புடிச்சீங்க இத?

Radha Sriram said...

nice.:):)

சரவணன் said...

மறுமொழியளித்த அனைவருக்கும் நன்றி.

//ஒரு நிமிஷம் அப்படியே ஆடிப்போய்ட்டேன்... பேச்சே வரலை... //

உண்மைதான் icarusprakash, இவை உள்ளத்தைத் தொடுகின்றன.

எனக்கு மின்னஞ்சலில் forward ஆக வந்தது; 'fun_and_fun_only' என்ற யாகூ குழுமத்திலிருந்து வந்ததாகத் தெரிகிறது. அவர்களுக்கு எங்கே கிடைத்ததோ தெரியவில்லை.

சேதுக்கரசி said...

cute-ஆ இருக்குதுங்க.. இதை முன்பே படிச்சிருக்கேன், இன்னுக்குதான் படத்தோட பார்க்கிறேன். http://gilli.in (கில்லியில்) உங்க பதிவோட சுட்டியைப் போட்டிருந்தாங்க.

சரவணன் said...

//http://gilli.in (கில்லியில்) உங்க பதிவோட சுட்டியைப் போட்டிருந்தாங்க.//


தகவலுக்கு நன்றி சேதுக்கரசி. Gilli பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் இதுவரை சென்றதில்லை. இப்ப பார்க்கிறேன் :-)

செல்வா said...

அற்புதம், அற்புதம் சரவணன்!
எக்கச் சக்கம் போங்க!
சிரிப்பு நிற்க கொஞ்ச நேரம் ஆச்சு!

எல்லாமே அருமை! அந்த 'சென்னி'வர் பொண்ணு சொல்லுச்சே அப்படித்தான் fancy ஆ பேசுவாங்களான்னு அது ~சுப்பர். "ஆனால் நான் Amerarican, நீங்க?" என்பதில் நான் வேறு பொருள் கொண்டேன். இது உண்மையில் ஒரு குழந்தை எழுதியதா என நான் அறியேன். Am-Ear-I-Can என்று படித்தேன் :)

ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்து!

நன்றி

Vino said...

where did you get this collections from? awesome !

முபாரக் said...

வார்த்தைகளில்லை.........

மிக்க நன்றி

முபாரக் said...

அன்பு சரவணன்

இதுபோலிருந்தால் மேலும் இடுங்கள்.

மிக்க நன்றி.

சரவணன் said...

தங்கள் கருத்துகளைப் பதிவு செய்த செல்வா, vino மற்றும் முபாரக் ஆகியோருக்கு நன்றி.

Anonymous said...

மிக மிக அருமை, நிறைய சிந்திக்க கூடிய கேள்விகள், உதாரணமாக லைட்டை நீங்கதான் கண்டுபிடிச்சீங்களா,ஸ்கூலில் சொன்னார்கள் என்பது போன்றது.

வேளராசி said...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

சரவணன் said...

வாழ்த்துகளுக்கு நன்றி வேளராசி! ஆனாலும் தமிழ் புத்தாண்டு தை 1 ஆம் தேதி என்பதே என் கருத்து. வேண்டுமானால் சித்திரைப் புத்தாண்டு என அழைக்கலாம்!

இன்னும் ஒன்று - வாழ்த்துக்கள் அல்ல, வாழ்த்துகள் என்பதே சரி.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

எவ்வளவு அழகான கேள்விகள் கேட்டிருக்கிறாங்க.

கடவுள் என்றொருவர் இருக்கிறார் என்று அந்தச் சிறு உள்ளங்களில் நஞ்சை விதைத்து...சிறுபிள்ளைகளைக் கூட ஏமாற்றியிருக்கிறார்கள்.

கடவுள் இருக்கிறார் எனக் கொண்டால் அத்தனை கேள்விகளுமே அர்த்தமற்றவை.

கடவுள் இல்லையெனின் அத்தனையுமே அர்த்தமுள்ளவை.

தமிழ் said...

சிந்திக்க கூடிய கேள்விகள

M.Rishan Shareef said...

என்னவென்று சொல்வது சரவணன்?
ஆஹா..ஒவ்வொரு கடிதங்களும் அற்புதமாக இருக்கின்றது.

குழந்தைகளின் மழலைச் சொற்கள் கடிதங்களில் வழிகின்றன.அவர்கள் வளரும் போது அத்தனையையும் சுருட்டிக் காலம் எங்கேயோ எறிந்து விடுகின்றது.

சம்பந்தப்பட்ட குழந்தைகளே பெரியவர்களாகி இதனைப் படிக்கநேரிடும் போது புன்னகைத்துக் கொள்வார்களென எண்ணுகிறேன்.

அண்மையில் நான் பார்த்த பதிவுகளிலேயே மிக அழகான பதிவு இது.

நன்றியும்,வாழ்த்துக்களும் நண்பரே :)