Sunday 16 March 2008

நாலே வரியில் பின்நவீனத்துவத்துக்கு மிக எளிய அறிமுகம்!

பின்நவீனத்துவம் என்ற பதம் தமிழ்வலையுலகில் அடிக்கடி அடிபடுவதைக் காண்கிறேன். சிலர் இச்சொல்லைப் பார்த்ததுமே கேலி செய்வதும் உள்ளது. இந்நிலையில் பின்நவீனத்துவம் பற்றி எனக்குத் தெரிந்தவரை ஒரு எளிய அறிமுகத்தைத் தருவது சிலருக்காவது (நான் உட்பட--உங்கள் எதிர்வினைகள் மூலம்) பயனளிக்கும் எனக் கருதியதன் விளைவே இந்த இடுகை.


பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, நாம் பின்நவீன உலகில்தான் வாழ்ந்துவருகிறோம் என்பதை எடுத்த எடுப்பில் கூறிக்கொள்கிறேன். உங்களைக் காக்க வைக்காமல் அந்த நாலு வரிகள் இதோ:


* பழைய காலம்: பெண் படிக்கக் கூடாது, வேலைக்குச் செல்லக் கூடாது என்று வீட்டுக்குள்ளே பூட்டி வைத்தது.

* நவீன காலம்: பெண் படிக்க வேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தியது. வீட்டை மட்டும் ஒரு பெண் கவனித்துக்கொள்வது சற்று கேவலமாகப் பார்க்கப் பட்டது.


* பின்நவீன காலம்: வேலைக்குச் செல்வதோ வீட்டைக் கவனித்துக் கொள்வதோ தனிப்பட்ட பெண்ணின் விருப்பம்; இதில் கவனிக்க வேண்டியது அவளுக்குத் தேர்வு உரிமை (choice) இருக்கிறதா என்பதே என உணரப்பட்டது. வீட்டைக் கவனித்துக் கொள்வதும் அவசியமான உழைப்பாக மதிக்கப்பட்டது. அதே போல, ஒரு ஆண், குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு வீட்டில் இருப்பதிலும் எந்தக் கேவலமும் இல்லை என்கிற தெளிவு ஏற்பட்டது.


ஆக, பின்நவீனத்துவம் நம் இன்றைய உலகைப் புரிந்துகொள்ள ஒரு முயற்சி மற்றும் எதிர்வினை என்று கூறலாம்.


இலக்கியத்தில் உதாரணம் பார்ப்போம்:

* பழைய காலம்: வாய்மொழி இலக்கியங்களில் மரம், மட்டை, விலங்குகள் எல்லாம் பேசின. இவை வெகு இயல்பாகக் கதையில் வந்து போயின.
* நவீன காலம்: அது எப்படிய்யா மரம் பேசும்? கதை என்றால் நம்பும்படியாக, யதார்த்தமாக (realistic) இருக்க வேண்டும் என்றது.
*பின்நவீன காலம்: யதார்த்தமாக எழுதப்படும் கதை என்பதும் எழுத்தாளரால் கவனமாகத் தன் கற்பனையில் கட்டி எழுப்பப் படுவதுதான். ஆக அவர் ஏன் தன் கற்பனைக்குத் தானே எல்லைக் கோடு போட்டு சிறையிட்டுக்கொள்ள வேண்டும்? கதையோட்டத்துக்குத் தேவைப்பட்டால் அதைமீறி மாய உலகைப் படைப்பதில் தவறில்லை என்ற புரிதல் விளைந்தது. Fantasy, science fiction, magical realism என்பவை தோன்றின. அதற்காக, மாய அம்சங்கள் இருந்தே ஆக வேண்டும் என வலியுறுத்துவதில்லை.


வரலாற்று ரீதியாக, இரண்டாம் உலகப் போருக்குப்பின் பழைய கொள்கைகளின் போதாமையால் ஏற்பட்டதே பின்நவீனத்துவம் என்ற தத்துவம். கட்டிடக்கலைதான் பண்டைக்காலக் கூறுகளை மீண்டும் பயன்படுத்தி இதற்கு அடிகோலியது.


பின்நவீனத்துவத்தின் குறிப்பிடத்தக்க பண்பு அது மனிதர்களிடையே காணப்படும் சகல வேறுபாடுகளையும் அங்கீகரிப்பது, ஏன், கொண்டாடுவது. இவற்றின் அடிப்படையில் தாழ்ச்சி, உயர்ச்சி சொல்வதில்லை. மேலும், இலக்கியம் போன்றவற்றில் சகலரும் ஏற்கக்கூடிய தர அளவுகோள்கள் இருப்பதாக ஏமாற்றிக்கொள்வதில்லை. நகுலனோ, பாலகுமாரனோ - ஒருவர் அடுத்தவரை விட இலக்கியத் தரத்தில் சிறந்தவர் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. எனவே 'எனக்கு இன்னாரைப் பிடிக்கிறது' என்று சொல்வதோடு உன் வேலை முடிந்தது என்கிறது. உம்பர்ட்டோ ஈகோவைப் படிப்பதால் நான் ராஜேஷ்குமாரைப் படிப்பவரைவிட ரசனை அதிகம் கொண்டவன் என எண்ணிக்கொண்டால் எள்ளி நகைக்கிறது பின்நவீனத்துவம். அதேவேளை எந்தக் கதை/கட்டுரை/கவிதை/சினிமா/நாடகம் ஆகியவற்றினூடாகச் செயல்படும் அரசியலைக் கேள்விக்குட்படுத்துகிறது.


இப்பொழுது பின்நவீனத்தின் மேலும் சில கூறுகளைப் பார்க்கலாம்:


* கலையில் கீழானது, மேலானது என்ற வகைப்பாடு ஒழிந்தது: நாதசுரம் மட்டுமே இசைத்து நிகழ்ச்சிகளைத் தொடங்குவது போய் பறையொலியுடன் இன்று விழாக்கள் ஆரம்பிக்கப் படுகின்றன. அதற்காகக் கர்நாடக இசையும் தூக்கி எறியப்படுவதில்லை. (சென்னை சங்கமம் நினைவிருக்கிறதா?)




* காமிக்ஸ்கள் இலக்கியமாக ஏற்கப்படுகின்றன. (Asterix போல)
Beatles உட்பட பாப், ராக், திரைப்படப் பாடல்கள் என ஜனரஞ்சகமான அனைத்தையும் காட்டுக்கூச்சலாகவே காணும் வெங்கட் சாமிநாதன் போன்றோர் நவீன காலத்திலேயே தேங்கிப் போயுள்ளதைக் காணலாம்.


* தீப்பெட்டிப் படங்கள், பள்ளி மாணவருக்கான சார்ட்டுகள், திரைப்பட போஸ்டர்கள் போன்றவை கலை வடிவங்களாக ஏற்கப்பட்டு சிலாகிக்கப் படுகின்றன.

matchbook poster

பின்நவீனத்துவத்தின் முக்கிய அம்சம், அது எந்த ஒரு குறிப்பிட்ட charthbookகொள்கையோ, கோட்பாடோ, சூத்திரமோ உலகைப் புரிந்துகொள்ள உதவும் என்பதை நிராகரிக்கிறது. இதை நாமும் நடைமுறையில் பார்க்கிறோம். நவீன கால சூத்திரப்படிப் பார்த்தால் இடதுசாரிகள் முதலாளிகளுக்கு எதிரானவர்கள். இன்றைய பின் நவீனத்துவ உலகிலோ, நந்திகிராமில் கம்யூனிஸ்டுகள் முதலாளிக்கு ஆதரவாக விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த, வலதுசாரியாக இருக்க வேண்டிய பாரதீய ஜனதா விவசாயிகளுக்காகப் போராடுகிறது! கம்யூனிஸ்டு நாடான சைனா தனியார் முதலீட்டில் முன்னிலையில் இருக்கிறது.


இலங்கையில் அன்பையே போதிக்கும் புத்தமதத்தைச் சேர்ந்த சந்நியாசிகளே தமிழரை ஒடுக்குவதில் முன்னிற்பதையும் பார்க்கிறோம்.

எந்தத் தனி ஒருவரிடமும்--அது காந்தியோ, ஏசுவோ, வள்ளுவரோ, ராமானுஜரோ, நபிகளோ, மார்க்ஸோ, பெரியாரோ, ஜெயலலிதாவோ, ஸ்டாலினோ (இதில் ஜோஃசப்போ, மு.க. வோ)--நம் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளோ, எல்லாக் கேள்விகளுக்கும் விடைகளோ கிடைக்கும் என்பதை பின்நவீனத்துவம் ஒத்துக்கொள்ளவில்லை. இவர்கள் எல்லார் சொன்னதிலும் அவரவர் சூழ்நிலைக்கேற்ற சில தீர்வுகள் இருக்கலாம் என்பதை ஏற்கிறது.

இன்று WTOவை எதிர்த்து நடக்கும் போராட்டங்களைப் பாருங்கள்: இடதுசாரிகள், சூழலியளாலர்கள், மாணவர்கள், மனித உரிமையாளர்கள், பெண்ணியவாதிகள் என ஒரு கலவையான திரளைப் பார்க்கலாம். ஒருவர் 'WTO திமிங்கலங்களைக் கொல்கிறது' என்ற அட்டையை ஏந்தி வந்ததைப் பார்த்திருக்கிறேன். பின்நவீன உலகின் போராட்டங்கள் இப்படித்தான் இருக்கும்.

தனி மனித ஒழுக்கத்தைப் பொறுத்தவரை எல்லோருக்குமான ஒழுக்கவிதி என்று எதுவும் இருக்க முடியாது. அடுத்தவரைப் பாதிக்காதவரை அது அவரவர் பாடு. ஒருவர் தனி அறைக்குள் புகைபிடித்தால் அதில் ஒழுக்கக்கேடு எதுவும் இல்லை; அதே புகையை அடுத்தவர் சுவாசிக்கும்படி செய்து புற்றுநோயைப் பரிசளித்தால் அது ஒழுக்கக்கேடு ஆகும்.

மொத்ததில் மிக அதிக ஜனநாயகப் பண்பு உடைய தத்துவமே பின்நவீனத்துவம் ஆகும். இது யாரும் உட்கார்ந்து யோசித்துக் கண்டுபிடித்தது அல்ல. இன்றைய உலகு தானே தேர்ந்துகொண்டதே.

முற்பட்ட வகுப்பார் ஓட்டை(யும்) வாங்கி ஆட்சியைப் பிடித்த மாயாவதி அசலான பின்நவீனத்துவ அரசியல்வாதி. தத்தமது கொள்கையை உடும்புப் பிடியாகப் பிடிக்கும் எந்த அரசியல்வாதியும் இன்றைய பின்நவீனகால வாக்காளர்களால் நிராகரிக்கப் படுவார். அதேபோல ஒரே ஒரு குடும்பத்தை முன்னிறுத்தினால் பின்நவீனத்துவ உலகில் வேலைக்காகாது என்று காங்கிரஸ் மற்றும் நாடெங்கும் உள்ள பிற கட்சிகளும் போகப்போகப் புரிந்துகொள்ளும்.

மேல் விவரங்களுக்கு: Oxford போன்ற பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள 'Dictionary of Sociology' பார்க்கலாம். தமிழில் தமிழவன் தவிர மற்றவர்கள் நூல்களைக் கண்டிப்பாகத் தவிர்க்க!

32 comments:

சுந்தரவடிவேல் said...

எளிய விளக்கம் சரவணன், எனக்குப் பிடித்திருக்கிறது!

சரவணன் said...

ரொம்ப நன்றி சுந்தரவடிவேல். ஆதரவோ, மறுப்போ மறுமொழிகளின் முக்கியத்துவத்தைச் சொல்லத் தேவையில்லை. நான் எழுதியது உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி :-)

நிஜமா நல்லவன் said...

தமிழ் பதிவுகள் படிக்க ஆரம்பித்தபோது பின்நவீனத்துவம் என்ற பதத்தை நிறைய இடங்களில் பார்க்க நேர்ந்தது. ஆனால் அர்த்தம் புரியவேஇல்லை. நாலே வரியில் பின்நவீனத்துவம் எளிய அறிமுகம் என்று தமிழ்மணத்தில் தெரிந்ததால் வந்தேன். பதிவு நீண்டதாக இருந்தாலும் விளக்கம் எளிதாக புரிந்து கொள்ளும்படி இருக்கிறது. மிக்க நன்றி.

மகேஷ் said...

sir,
grerat blog to know this..
i have searched for this a long time even in net..
never found this much simple with exdplanations so practical..
really happy to know the modernisn and postmodernism difference..
great work..expect more from u!!

சரவணன் said...

நன்றி நிஜமா நல்லவன். நாலு வரி என்று குறிப்பிட்டது பெண் உரிமையை முன்வைத்து பழமை, நவீனம், மற்றும் பின்நவீனம் இடையேயான வித்தியாசத்தை விளக்கி ஒரு அறிமுகம் தந்ததையே. மற்றபடி அதன் சில முக்கியக் கூறுகளைச் சொல்வது அவசியம் என்று நான் கருதியதால் பதிவு சற்றே நீண்டுவிட்டது. ஆனாலும் படுத்தவில்லை அல்லவா :-)

சரவணன் said...

நன்றி மகேஷ். Thanks so much for your appreciation. மத்தபடி சார், மோரல்லாம் வேண்டாம்:-) சரவணன்னே கூப்பிடுங்க!

நாமக்கல் சிபி said...

நல்ல விளக்கங்கள் சரவணன்!

(சரியா போஸ்ட் எழுதலைன்னா என்ன கொடுமை சரவணன் இதுன்னும் சொல்லுவோம்)

மு. மயூரன் said...

"அதை" எளிமையாகப் புரியவைக்க வேண்டும் என்ற உங்கள் நன்னோக்கம் பாராட்டுக்குரியது.

ஆனால், இந்த உதாரணங்களோ, இவ்வாறான பருமட்டான விளக்கங்களோ பின்னவீனத்துவத்தைப் புரிந்துகொள்வதில் இருந்து வாசகரை தவறான புரிதலுக்கே இழுத்துச்செல்லும்.

முக்கியமாக நீங்கள் நவீனத்துவத்தையும் பின்னவீன நிலவரத்தையும் கோடு போட்டுப்பிரித்துக்காட்ட முயலும் இடங்கள் மிகக் குழப்பகரமானவை.

முன்னர் ஒருமுறை டீ சே தமிழனும் பின்னவீனத்தைத்தான் புரிந்துகொண்ட விதம் என்று ஒரு பதிவை இவ்வாறு எழுதமுயன்று தோல்விகண்டிருந்தார்.

பின்னவீனத்துவத்தை வரையறைக்குட்படுத்துவதே பின்னவீனத்தை புரிந்துகொள்வதற்கு எதிரானதுதான்.

நவீனத்துவ காலத்து உலகப்பார்வை, நம்பிக்கைகள் போன்றவற்றை திறனாய்வது பின்னவீனத்துவத்தைப்பற்றிய படம் ஒன்றைத்தருமோ என்று எண்ணத்தோன்றுகிறது.

இவ்வாறு நான் சொல்வதுகூட இந்த நிலவரம் குறித்த எனது தனிப்பட்ட புரிதலாகத்தான் இருக்கமுடியும்.

அதுதான் தற்போதைய நிலவரம் ;-)

அற்புதன் said...

மல்லி,

உங்கள் கட்டுரையில் இருக்கும் முரண்பாடுகளைப் பாருங்கள்.

//ஆக, பின்நவீனத்துவம் நம் இன்றைய உலகைப் புரிந்துகொள்ள ஒரு முயற்சி மற்றும் எதிர்வினை என்று கூறலாம்//

//வரலாற்று ரீதியாக, இரண்டாம் உலகப் போருக்குப்பின் பழைய கொள்கைகளின் போதாமையால் ஏற்பட்டதே பின்நவீனத்துவம் என்ற தத்துவம். //

பின் நவீனத்துவம் என்பது ஒரு தத்துவமா? அப்படியாயின் அது எதைச் சொல்கிறது?

மேலே அது ஒரு புரிதல் முறை என்று சொல்லி இருகிறீர்கள்?

இந்த உலகத்தைப் புரிந்து கொள்வதற்க்கு அது உதவி செய்வதால் என்ன பலன்?

//பின்நவீனத்துவத்தின் குறிப்பிடத்தக்க பண்பு அது மனிதர்களிடையே காணப்படும் சகல வேறுபாடுகளையும் அங்கீகரிப்பது, ஏன், கொண்டாடுவது.//


உயர்வும் தாழ்வும் இருப்பதுவும் வேறுபாடுகள் இருப்பதுவும் உலகில் நிதர்சனமான உண்மைகள் என்பதன் மூலம் அது எதனைச் சொல்ல வருகிறது எதனைச் சாதிக்கிறது?


உலகம் மாற்றம் பெற வேண்டும் என்று சொல்லாமால் இருப்பதன் மூலம் அது இருக்கின்ற வேறுபாடுகளைப் பாதுகாக்கிறது.அதனாலையே அது மத வாதிகளாலும்,ஏகாதிபதியங்களாலும் மறைமுகமாக வளர்த்து எடுக்கப்படுகிறது.

//அதேவேளை எந்தக் கதை/கட்டுரை/கவிதை/சினிமா/நாடகம் ஆகியவற்றினூடாகச் செயல்படும் அரசியலைக் கேள்விக்குட்படுத்துகிறது.
//

பின் நவீனத்துவ அரசியலே ஏன் கதை,கட்டுரை,கவிதை என்பனவற்றினூடாகச் செயற்படுகிறது?
சிறு கதையாடல் என்பது தானே தமிழில் பின் நவீனத்துவர்கள் என்று உளறிக் கொட்டுபவர்கள் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் ஒரு சொல்லாக இருக்கின்றது.

//பின்நவீனத்துவத்தின் முக்கிய அம்சம், அது எந்த ஒரு குறிப்பிட்ட கொள்கையோ, கோட்பாடோ, சூத்திரமோ உலகைப் புரிந்துகொள்ள உதவும் என்பதை நிராகரிக்கிறது//


//ஆக, பின்நவீனத்துவம் நம் இன்றைய உலகைப் புரிந்துகொள்ள ஒரு முயற்சி மற்றும் எதிர்வினை என்று கூறலாம்//

ஆகவே பின் நவீனத்துவம் என்பதே உலகைப் புரிந்து கொள்ள உதவாது.

அது தன்னையே இதன் மூலம் நிராகரிக்கிறது.தன்னையே நிராகரிக்கும் ஒரு தர்க்கத்தையே பின் நவீனத்துவம் முன் வைக்கிறது.அதாவது நான் சொல்வதெல்லாம் பொய் ஆகவே என்னை நம்பாதீர்கள் என்று சொல்கிறது.ஆகவே அதன் தர்க்கத்தின் படியே பின் நவீனத்துவத்தை நாம் நிராகரிக்கலாம்.

சரவணன் said...

நண்றி சிபி.

///(சரியா போஸ்ட் எழுதலைன்னா என்ன கொடுமை சரவணன் இதுன்னும் சொல்லுவோம்)///

இன்னும் சொல்லலயேன்னு நினைச்சேன் :-))

சரவணன் said...

நன்றி மயூரன். ஆங்கிலப் புத்தகங்களிலும், பத்திரிகைகளிலும் postmodern என்ற சொல் வெகு சாதாரணமாகப் புழங்குகிறது. தமிழ்ச் சூழலிலும் தீவிர எதிர்பு/ஒவ்வாமை அல்லது மெய்மறந்த பரவசம் ஆகிய உணர்வுகளை ஏற்படுத்தாமல் சாதாரணமாக அதனோடு கலந்துரையாடப் படும் நிலை உருவாக வேண்டும் என்பதே என் அவா.

எப்படியோ இன்றைய complex உலகிற்கான தத்துவ மற்றும் கலை நோக்கு அது என்று கூறுவதிலாவது வெற்றி பெற்றிருந்தால் அதுவே மகிழ்ச்சி.

உங்கள் பின்னூட்டம் என் இடுகைக்கு நல்ல பின்னுரை! டி. சே. தமிழனின் கட்டுரையைப் படித்துப் பார்க்கிறேன்.

சரவணன் said...

நீண்ட எதிவினைக்கு நன்றி அற்புதன்.

//மேலே அது ஒரு புரிதல் முறை என்று சொல்லி இருகிறீர்கள்?//

புரிந்துகொள்ளும் முயற்சியாக உருவான தத்துவம் என்கிறேன்.

//இந்த உலகத்தைப் புரிந்து கொள்வதற்க்கு அது உதவி செய்வதால் என்ன பலன்?//

நாம் செய்ய வேண்டியது உலகத்தைப் புரிந்துகொள்வது அல்ல, அதை மாற்றுவதே என்று மார்க்ஸ் கூறியதை மனதில் கொண்டு கேட்கிறீர்களா? புரிந்துகொண்டால்தான் மாற்ற முடியும் என்பது என் கருத்து.

//உயர்வும் தாழ்வும் இருப்பதுவும் //

நான் வேறுபாடு எனக்குறிப்பிடுவது நாடு, இனம், மொழி, கலாச்சாரம், பண்பாடு, நிறம், பால், sexuality போன்றவற்றை. இவற்றைக் கொண்டாடுவதன் மூலம் விளிம்பு நிலை மக்களுக்கு மறுக்கப்பட்டு வந்த அங்கீகாரத்தைப் பெற்றுத் தருகிறது.

[இனி குடும்ப அட்டையில் ஆண், பெண் பால்களைத் தவிர T என transgenders குறிப்பிடலாம் என வந்துள்ள செய்தி ஒரு போஸ்ட்மாடர்ன் உலகில்தான் நடக்கும்.]

//உலகம் மாற்றம் பெற வேண்டும் என்று சொல்லாமால் இருப்பதன் மூலம் //

மாறாக, விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றம் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது என்கிறது.

//பின் நவீனத்துவ அரசியலே ஏன் கதை,கட்டுரை,கவிதை என்பனவற்றினூடாகச் செயற்படுகிறது?//

தொழிலளி சார்பாக என்று கூறி ஒரு முற்போக்குக் கவிஞர் எழுதிய கவிதை எப்படித் தொழிலாளிமேல் அதிகாரம் செலுத்தி அவனை வாயில்லாப் பூச்சி ஆக்குகிறது என்பது கட்டுடைத்தல் மூலம் வெளிப்படுவதை தமிழ்வனின் 'தமிழ்க்கவிதையும் மொழிதல் கோட்பாடும்' புத்தகத்கில் காண்க.

//பின்நவீனத்துவத்தின் முக்கிய அம்சம், அது எந்த ஒரு குறிப்பிட்ட கொள்கையோ, கோட்பாடோ..//

ஆமாம். Act locally என்று சொல்வதுபோல உங்கள் சூழ்நிலைக்கான கொள்கையை நீங்களே தேர்ந்து கொள்ள வேண்டும். சகல உலக மக்களுக்கும், சகல காலத்திலும் பயன் தரும் கோட்பாடோ, கொள்கையோ இல்லை என்கிறது.


//அது தன்னையே இதன் மூலம் நிராகரிக்கிறது.//

ஒரு குறிப்பிட்ட புத்தகம் காலாகாலத்துக்கும் செல்லுபடியாகும் என்று மதங்களைப் போல, மார்க்ஸியம் போல பின்நவீனத்துவம் கூறாததால் அது என்றும் உயிர் வாழும்.

அற்புதன் said...

சரவணன்,

சரி உங்கள் விளக்கத்தின் படியே பின் நவீனத்துவத்தை தத்துவம் என்றே எடுத்துக் கொள்வோம்.தத்துவம் என்றால் என்ன என்பதை வரயறை செய்வோம்.

// phi·los·o·phy - the rational investigation of the truths and principles of being, knowledge, or conduct. //

http://dictionary.reference.com/browse/philosophy

தத்துவம் என்பது உண்மைகளைக் கண்டறிவதற்கான அறிவார்ந்தமான தர்கவியல் விசாரணைகளின் தொகுப்போ அன்றில் அதன் பாற்பட்ட முறைமைகளோ ஆகும்.

முதலில் பின் நவீனத்துவம் உண்மை என்பதை மறுக்கிறது.உண்மைகளை நோக்கிய தத்துவ விசாரணைகளையே அது மறுக்கிறது.தத்துவ விசாரணை என்பதே ஆசிரியனின் கதையாடால் என்கிறது.அவை அந்த ஆசிரியனுக்கே உரித்தான உண்மைகள் என்கிறது.பல ஆசிரியர்களும் பல உண்மைகளும் இருக்கமுடியும் என்பதன் மூலம் தத்துவ விசாரணைகளுக்கு அடிப்படையாக அமையும் உண்மை,பொய்மை என்னும் இரு கூற்றி நிலைப்பட்டை மறுக்கிறது.மேலும் தர்க்கம் என்பதே சொல் விளையாட்டு அல்லது சொல்லாடால் என்கிறது.கட்டுடைத்தல் என்பது பின் நவீனத்துவம் சொல்ல விழைகின்ற அல்லது அது நிறுவ முயல்கின்ற தர்க்கத்தின் மீதும் பிரயோகிக்கப்படும் போது அங்கே பின் நவீனத்துவம் என்னும் தர்க்கமே வெறும் சொல்லாடலாக கட்டுடைகிறது.

To put it simly if every narrative is a construction of the author, the narrative of the post modernist it self is a consturction of the narrator and hence has to be de constructed.what you are left with is nothing.

//புரிந்துகொண்டால்தான் மாற்ற முடியும் என்பது என் கருத்து.//

பின் நவீனத்துவம் எவ்வகையாக இதனைச் சாதிக்கமுடியும் என்று சொல்கிறது?அதற்கான வழிவகைகள் என்ன என்ன?

//இவற்றைக் கொண்டாடுவதன் மூலம் விளிம்பு நிலை மக்களுக்கு மறுக்கப்பட்டு வந்த அங்கீகாரத்தைப் பெற்றுத் தருகிறது//

மீண்டும் மீண்டும் வெறும் வார்த்தைப் பிரயோகங்களே.விளிம்பு நிலை என்பதை ஏன் கொண்டாட வேண்டும்? இவர்களுக்கு விளிம்பு நிலை என்னும் அங்கீகாரத்தை வழங்குவதன் மூலம் பின் நவீன்த்துவம் இவர்களை விளிம்பு நிலையிலையே வைத்திருக்க முற்படுகிறது.இவர்களின் நிலையை மாற்றுவதற்கான என்ன வழிவகையை பின் நவீனத்துவம் வழங்குகிறது?

ஒடுக்கப்பட்டவர்களுக்கு வேண்டியது இவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்ங்கிற முத்திரை அல்ல.அவர்களுக்கு வேண்டியது தமது நிலையை மாற்றுவதற்கான அதிகாரமே.

//மாறாக, விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றம் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது என்கிறது//

மாற்றம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும், ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரை.பின் நவீனத்துவம் என்னும் பேய்க்காட்டல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மாற்றம் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும்.ஏனெனில் மனித வாழ்க்கை என்பது பொருளாதாரா ஏற்றத் தாழ்வுகளாலும் அதன் பாற்பட்ட சமூக உறவு நிலைகளாலும் நிர்ணயிக்கப்படும் வரை இவற்றின் பாற்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும்.வரலாற்று இயங்கியல் அதனைத் தான் சொல்கிறது.

//தொழிலளி சார்பாக என்று கூறி ஒரு முற்போக்குக் கவிஞர் எழுதிய கவிதை எப்படித் தொழிலாளிமேல் அதிகாரம் செலுத்தி அவனை வாயில்லாப் பூச்சி ஆக்குகிறது என்பது கட்டுடைத்தல் மூலம் வெளிப்படுவதை தமிழ்வனின் 'தமிழ்க்கவிதையும் மொழிதல் கோட்பாடும்' புத்தகத்கில் காண்க.//

இதையே நான் இவ்வாறு மாற்றி எழுதலாம்.

தலித்தின் சார்பாக என்று கூறி ஒரு பின் நவீனத்துவக் கவிஞர் எழுதிய கவிதை எப்படித் தலித்தின் மேல் அதிகாரம் செலுத்தி அவனை வாயில்லாப் பூச்சி ஆக்குகிறது என்பது கட்டுடைத்தல் மூலம் வெளிப்படுவதை பேராசிரியர் உம்பரோ குஜேயின் 'தமிழ்க்கவிதையும் மொழிதல் கோட்பாடும்' புத்தகத்கில் காண்க.

//ஆமாம். Act locally என்று சொல்வதுபோல உங்கள் சூழ்நிலைக்கான கொள்கையை நீங்களே தேர்ந்து கொள்ள வேண்டும். சகல உலக மக்களுக்கும், சகல காலத்திலும் பயன் தரும் கோட்பாடோ, கொள்கையோ இல்லை என்கிறது.//

அய்யா அப்படியாயின் எமக்கு ஏன் வேண்டும் இந்தப் பின் நவீனத்துவம் அது ஒன்றையுமே சொல்ல வில்லை நீயாக தெரிந்து எடுத்துக்கொள் எங்கிறது எங்கிறீர்கள்.ஆனால் அது உலகைப் புரிந்துகொள்வதற்கான தத்துவம் எங்கிறீர்கள்.அங்கே தத்துவம் என்று சொல்ல அதில் என்ன இருக்கிறது?


//
ஒரு குறிப்பிட்ட புத்தகம் காலாகாலத்துக்கும் செல்லுபடியாகும் என்று மதங்களைப் போல, மார்க்ஸியம் போல பின்நவீனத்துவம் கூறாததால் அது என்றும் உயிர் வாழும்.//

ஆமாம் அது ஒன்றையுமே கூறாமல் எல்லாவர்றையும் கூறுவதாக என்னன்று அய்யா கற்பனை செய்து கொள்கிறீர்கள்?பின் நவீனத்துவம் என்பது என்றோ மேற்குலகில் செத்து ஒழிந்து விட்டது.அது என்றும் உயிர் வாழும் என்று எப்படி அய்யா ஆரூடம் கூறுகிறீர்கள்?

நான் மேற் சொன்னவை மேற்குலகில் பின் நவீனத்துவத்திற்க்கு எதிராக கேட்க்கப் பட்ட கேள்விகள்,அதற்கு பதில் அழிக்க முடியாமால் தான் அங்கு அது செத்து ஒழிந்து விட்டது.

முரளிகண்ணன் said...

nice

ஜமாலன் said...

எளிமையான அறிமுகம்.

தன்னையே தகர்த்துக்கொள்வது என்பதே ஒரு பினநவீனத்துவ நிலைப்பாடு என்பதை அற்புதமாக சுட்டிக்காட்டியுள்ளார் நண்பர் அற்புதன்.

//பின் நவீனத்துவம் என்பதே உலகைப் புரிந்து கொள்ள உதவாது//

உதவாது என்பதல்ல உலகை ஒற்றையாக புரிந்து கொள்ளமுடியாது என்பதே பின்நவீனத்துவம்.பல உலகங்கள் உள்ளன. பாட்டாளியின் உலகமும் முதலாளியின் உலகமும் ஒன்றல்ல. இரண்டிற்கும் ஒரே அளவுகோல் கொண்டு புரிந்துகொள்ள முடியாது. அப்படி புரிந்தகொள்வதைதான் மார்க்ஸ் 'தலைகீழாகக் காட்டும் தவறான பிரக்ஞை' என்கிறார்.

//மீண்டும் மீண்டும் வெறும் வார்த்தைப் பிரயோகங்களே.விளிம்பு நிலை என்பதை ஏன் கொண்டாட வேண்டும்? இவர்களுக்கு விளிம்பு நிலை என்னும் அங்கீகாரத்தை வழங்குவதன் மூலம் பின் நவீன்த்துவம் இவர்களை விளிம்பு நிலையிலையே வைத்திருக்க முற்படுகிறது.இவர்களின் நிலையை மாற்றுவதற்கான என்ன வழிவகையை பின் நவீனத்துவம் வழங்குகிறது?

ஒடுக்கப்பட்டவர்களுக்கு வேண்டியது இவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்ங்கிற முத்திரை அல்ல.அவர்களுக்கு வேண்டியது தமது நிலையை மாற்றுவதற்கான அதிகாரமே. //

அப்படிப்பார்த்தால் மார்க்சியம் கூறும் பாட்டாளிவர்க்கம் என்பதும்கூட ஒரு முத்திரைதான். மாற்றுவதற்கான அதிகாரம் என்பதை பெறுவதற்கு அவர்கள் தங்களது 'தவறான பிரக்ஞை' அதாவது கருத்தியல் கட்டுமானத்திலிருந்து விடுபடவேண்டும். அதற்கு கருத்தியல் கட்டுடைப்பு நடத்தப்பட வேண்டும். சரக்க பற்றிய பழங்கிவந்த தத்தவக் கோட்பாடுகளை பாட்டாளிவர்க்க கண்ணோட்டத்தில் கட்டுடைத்த நூல்தான் மூலதனம். பின்நவினத்தவம் என்பது கறித்த இஜாஸ் அகமது கறிப்பிடவதும் இதுதான. இது ஒன்றும் புதிதல்ல. பிரச்சனை இதனை விளக்கமான திட்டமாக முன்வைத்தவர்கள் வைத்த பெயரே பின்நவீனத்துவம் என்பது. அதில வழக்கம்பொல் வலது சாரிவாதமும் உள்ளது.

நண்பருக்கு.. பின்நவீனத்தவம் என்கிற வார்த்தையை எல்லாம் விட்டுவிடுங்கள்.. இன்றைய ஒடுக்கப்பட்ட மக்களை அல்லது ஒடுக்கபட்டிருக்கும் நம்மை மீட்டெடுப்பதற்கான செயல் திட்டத்திற்கு இந்த நவீன ஆய்வுமுறைகள் குறைந்தபட்சம் ஒரு கருவி நிலையிலாவது உதவுமா? இல்லையா என்பதுதான். உதவும் என்பதுதான் எமது நிலைப்பாடு. உதவாது இது அதற்கு எதிரானது என்பதற்கான சரியான கருத்துக்கள் வைக்கப்பட்டால் இதனை விட்டுவிடலாம். நமக்க தேவை விளக்கமல்ல மாற்றம் இதில் நமக்கு முரண்பாடில்லை. பிரச்சனை அந்த வார்த்தைகள் தரும் ஒருவித ஒவ்வாமைதான். அதை கலைந்துவிடலாம் என்பதே சரியானதாக இருக்கும்.

நன்றி.
அன்புடன்
ஜமாலன்.

சரவணன் said...

வாசிப்புக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி முரளி கண்ணன்.

நனறி ஜமாலன். உங்கள் அற்புதனுக்கு நீங்களே பதில் சொல்லி என் வேலையை மிச்சப்படுத்திவிட்டீர்கள்.

//பிரச்சனை அந்த வார்த்தைகள் தரும் ஒருவித ஒவ்வாமைதான். அதை கலைந்துவிடலாம் என்பதே சரியானதாக இருக்கும்.
//

அதே! அதே!

வால்பையன் said...

ஏதோ என்னாலான சிறு முயற்சி உங்களை போலவே

பாகம் 1

பாகம் 2

பாகம் 3

பாகம் 4

பின்நவீனத்தை கண்டு பயம் ஏன் பாகம் 1

பின்நவீனத்தை கண்டு பயம் ஏன் பாகம் 2

வால்பையன்

சரவணன் said...

ஜமாலனுக்கான பதிலில் உங்கள் அற்புதனுக்கு என்று தவறுதலாக இடம் பெற்றுவிட்டது. அற்புதனுக்கு என்று திருத்தி வாசிக்க.

மு. மயூரன் said...

ஜமாலன்,

பின்னவீனத்துவர்கள் என்று யாரேனும் இருக்கமுடியும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

அத்துடன் பின்னவீனத்துவம் என்று ஒரு தத்துவ இயக்கம் , லேபிள் இருக்க முடியும் என்றும்?

இந்த அடிப்படையிலேயே மார்க்சீயத்துக்கு அடுத்த கட்ட நிலவரமாக பின்னவீனத்துவம் பார்க்கப்படுவதை நான் மறுக்கிறேன்.

வேறு வேறான தளங்களில் இருக்கும் இரண்டு கோட்பாடுகளை மார்க்சீயம் எதிர் பின்னவீனத்துவம் என்று நமது "பின்னவீனத்துவர்கள்" கட்டமைகக் வெளிக்கிடுவது தவறென எனக்குப்படுகிறது.

இங்கே பெருவெளி என்றொரு சஞ்சிகை வருகிறது. அவர்களது அரசியல், குர்-ஆன் கட்டமைக்கும் அடிப்படைகளை அப்படியே காப்பது என்பதாகவும் இருப்பதாக உணர்கிறேன். இதற்கு அவர்கள் பின்னவீனத்துவத்தைக் கையிலெடுக்கிறார்கள்.

முஸ்லிம் தேசியம் தொடர்பான அரசியலுக்கு உண்மையில் நேர்மையாக கைகொடுகக்கூடிய மார்க்சீயத்தை அவர்கள் தொடவில்லை. காரணம், அது இயங்கியல் சார்பாக, மக்கள் சார்பாக இயங்கி இஸ்லாம் அடிப்படை வாதத்தினை கேள்விக்குட்படுத்திவிடும்.
இவ்வாறான சூழநிலைகளில் பின்னவீனத்துவம், அடிப்படை வாதத்தை காப்பாற்றி வைத்துக்கொள்ள உதவுமுகமாக, மார்க்சீயத்தை தகர்க்கும் ஆயுதமாக அவர்களுக்குப் பயன்படுகிறது.


தத்தமது அரசியல்களை வக்காலத்து வாங்கவும், நியாயப்படுத்தவும் நிலைப்படுத்தி வைத்துக்கொள்ளவும் முன்னர் மதங்களும் கடவுளும் உதவின.

இப்போது பின்னவீனத்துவம் உதவுகிறது.

ஒரு சிங்களப்பேரினவாதி தன்னை பின்னவீனத்தைக்கொண்டு நியாயப்படுத்த முடிகிறது. ஒரு போர்னோ படைப்பாளி தன்னை பின்னவீனத்துவவாதியாக அறிவித்துக்காப்பாற முடிகிறது.உலகமயமாக்கமும் தன்னை பின்னவீனத்தைத்துணைக்கழைத்துக் காத்துக்கொள்ள முடிகிறது.

ஆனால் என்றைக்கும் எப்போதும் நமது பின்னவீனத்துவர்கள் ஏகாதிபத்தியம் பற்றியோ, உலகமயமாக்கலின் அடிப்படைகளைத் தகர்ப்பது பற்றியோ மூச்சுவிடக்காணோம். அப்படியே அதைப்பேசினாலும், அது ஏகாதிபத்தியத்தை காப்பாற்றும் பணியையே மொத்தத்தில் செய்கிறது.

பெரும்பெரும் சக்திகளை , சுரண்டல் வடிவங்களை எதிர்க்கவே முடியாது என்று நிறுவுவதற்கான தத்துவமாகத்தான் நான் இதுவரை வாசித்த பின்னவீனத்துவப்பிரதிகள் தென்படுகின்றன.
நமது பின்னவீனத்துவர்களோ, மார்க்சீயத்தை, அதன் அடிப்படைகளை, அதன் மக்கள் சார்பு நிலையை கேள்விக்குட்படுத்தி, தகர்த்து ஒழிப்பதற்கே தமது பாதி நேரத்தை ஒதுக்குகிறார்கள்.

ஆக்கபூர்வமாக, மக்களைச்சுரண்டும் வழிகளை எதிர்ப்பதற்கான எதையும் செய்யக்காணோம். ஆனால் இடதுசாரிகளோ, தேசியவாதிகளோ ஏதாவது செய்யப்போனால், பாசிசம், ஹிப்போக்ரட்ஸ், இறுகிய வரட்டுக்கொட்பாட்டாளர்கள் என்று கூச்சலிட ஆரம்பித்து விடுகிறார்கள்.

இன்னொரு பின்னவீனத்துவரின் பிரதி தவிர்ந்த வேறெந்தப்பிரதியையாவது பின்னவீனத்துவத்தமிழர்கள் நன்றாகச்சொல்லிப்பார்த்திருக்கிறீர்களா?

இது இன்னொரு பிராமணீயமேயன்றி வேறில்லை.

தம்மை மற்றவரிலிருந்து வேறுபட்டவர்களாகக்காட்டுவதற்கே பின்னவீனத்துவ கலை இலக்கிய வடிஅங்கள், திற்னாய்வு போன்றவற்றை கையிலெடுக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.

மார்க்சீயம் போன்ற மக்கள்சார்பான, உலகை மாற்றமுடியும் என்று நம்பிக்கை அளித்து அதற்கான சமன்பாடுகளை உருவாக்கிக்கொடுக்கும் , வளரும் தன்மையுள்ள கோட்பாடுகள் விட்டுப்போன, பார்க்கத்தவறிய இடைவெளிகளை, சிறு சிறு நிழல்களை, புரிந்துகொள்ளவும், தவறுகளை debug பண்ணிக்கொள்ளவும் உதவும் ஒரு மேலதிக வெளிச்சமாகவே பின்னவீனத்துவத்தை என்னால் அணுக முடிகிறது.

அதை மார்க்சீயத்தைக்கடந்த அடுத்த நிலை என்றெல்லாம் பிரகடனப்படுத்தி, தாம் மார்க்சீயப்பழமைவாதிகளுக்கு பூச்சாண்டிகாட்டும் நவீன நல்லவர்கள் என்று தொண்டைகிழிய, யாருக்கும் புரியாத மொழியில் கத்தும்போது எரிச்சலும் சலிப்புமே மிஞ்சுகிறது.

பண்டைய வரி:

இந்தப்பூ தான் எவ்வளவு அழகு? கடவுளின் படைப்பே அற்புதம். எமது மனங்களும் பூப்போல இருந்துவிடாதா?


so called நவீன காலம்:

இந்தப்பூ அழகு. ஒரு நெருப்பின் சிவப்பைப்பிரித்தெடுத்து காம்பில் ஒட்டியது போல.. என் காதலி போல.


so called மார்க்சீயப் புரதான காலம்:-) :

இந்தப்பூ சிவப்பு நிறம். அழகானது. இந்தப்பூவை விளைவிக்கும் பூந்தோட்டங்கள் 200 ஏக்கர் பரப்பளவுள்ளவை. அங்கே நாளாந்தம் கூலியாக 20 ரூபாவே வழங்கப்படுகிறது. கடந்த வாரமே பூந்தோட்டத்தின் தொழிற்சங்கத்தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். பூவின் சிவப்பின் ஆழ்ந்த கறுப்பு நுண் நரம்புகளுள் அந்தச் சோகம் சிலவேளை கவிந்திருக்கும். கவனம்.


நமது "பின்னவீனர்கள்":

எச்சிலொழுக ஆவெனப்பிளந்த ராட்சசன்வாயினூடு விரட்டப்பட்டு வந்து விழுந்த தேவதைகளின் பூக்கூடைகளுக்குள் இருந்து வானத்துக்குள் போய்விழுந்த நிறத்துகள்கரைந்த மழையில் நனைந்த செந்நிறச்சிறுவூவின் இன்மைக்கும் இருத்தலுக்கும் நடுவே க்ளிக்க்குற்ற பூவின் வேதிப்படிமம் இது. சிவப்ப்பு. ஆம் நம் வரட்டு கம்யூனிஸ்டுக்களுக்குப் பிடித்த கலர்.

மு. மயூரன் said...

//பின்நவீனத்தவம் என்கிற வார்த்தையை எல்லாம் விட்டுவிடுங்கள்.. இன்றைய ஒடுக்கப்பட்ட மக்களை அல்லது ஒடுக்கபட்டிருக்கும் நம்மை மீட்டெடுப்பதற்கான செயல் திட்டத்திற்கு இந்த நவீன ஆய்வுமுறைகள் குறைந்தபட்சம் ஒரு கருவி நிலையிலாவது உதவுமா? இல்லையா என்பதுதான். உதவும் என்பதுதான் எமது நிலைப்பாடு. உதவாது இது அதற்கு எதிரானது என்பதற்கான சரியான கருத்துக்கள் வைக்கப்பட்டால் இதனை விட்டுவிடலாம். நமக்க தேவை விளக்கமல்ல மாற்றம் இதில் நமக்கு முரண்பாடில்லை//

உங்கள் கருத்தும் நிலைப்பாடும் நியாயமானது.

ஆனால், ஒடுக்கப்படும் மக்களுக்கான போராட்டங்களை கேலிபேசும், அதன் அடிப்படைகளைத்தகர்க்கும், துண்டுயு துண்டாக்கிச்சிதறடிக்கும் குழப்பவாதமாக, வெறும் கூச்சலாக, அடிப்படை வாதங்களுக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் சார்பானதாக இந்த கோட்பாடு பயன்படுத்தப்படுமானால் என்ன செய்யலாம் சொல்லுங்கள்..

சரவணன் said...

மயூரன், எது பின்நவீனத்துவம் இல்லை என்று மட்டும் தெளிவாகச் சொல்ல முடியும்: புரியாமல் எழுதுவது பின்நவீனத்துவம் அல்ல. தமிழில் தான் பின்நவீனப் படைப்பாளி என்று சொல்லிக்கொண்டு புரியாமல் எழுதி மக்களை ஏமாற்றும் நிலை உள்ளது. மேற்கில் யாரும் தான் ஒரு பின்நவீனப் படைப்பாளி என்று அறிவித்துக்கொள்வதும் இல்லை. புரியாமல் எழுதுவதும் இல்லை.

மேற்கை விடுங்கள், இந்தியாவிலேயே ஆங்கிலத்தில் ஒரு படைப்பாளி இப்படியாக எழுதினால் அதைப் பதிப்பகங்கள் முதல் பார்வையிலேயே நிராகரித்துவிடும். தமிழில் கேள்வி கேப்பாடு இல்லாமல் எல்லாக் குப்பைகளும் பிரசுரிக்கப் படுவதை தமிழ் பதிப்புத்துறையின் unprofessional நிலை சார்ந்த பிரச்சினையாகவே பார்க்கிறேன். தமிழ் பதிப்புத்துறை குறித்து நான் எழுதியுள்ள தனி இடுகையையும் நேரம் கிடைக்கையில் படித்துப் பாருங்கள்.

சிங்களப் பேரினவாதகளோ, மத அடிப்படைவாதிகளோ பின்நவீனத்துவத்தைத் தமக்கு சப்பைக்கட்டாக பயன்படுத்துவது பற்றி நான் அறிந்ததில்லை. இது ஒரு ஏமாற்று வேலையாகவே இருக்க முடியும் என்பது என் எண்ணம்.

இரண்டாவது முறையாக இவ்விடுகைக்கு வந்து விவாதத்தில் பங்களித்தமைக்கு மிகுந்த நன்றிகள்.

அற்புதன் said...

ஜமாலனின் பதில்களுக்கு நன்றிகள்,

விரிவாக உரையாட இப்போது நேரம் இல்லாது விட்டாலும் சில விடயங்களைக் உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

//நண்பருக்கு.. பின்நவீனத்தவம் என்கிற வார்த்தையை எல்லாம் விட்டுவிடுங்கள்.. இன்றைய ஒடுக்கப்பட்ட மக்களை அல்லது ஒடுக்கபட்டிருக்கும் நம்மை மீட்டெடுப்பதற்கான செயல் திட்டத்திற்கு இந்த நவீன ஆய்வுமுறைகள் குறைந்தபட்சம் ஒரு கருவி நிலையிலாவது உதவுமா? இல்லையா என்பதுதான். உதவும் என்பதுதான் எமது நிலைப்பாடு.//

பின் நவீனத்துவம் என்றால் என்ன என்பது பற்றி ஓரளவு மேலே உரையாடி உள்ளோம்.அதில் இருந்து 'உதவும்' என்று எவ்வாறு நீங்கள் கருதுகிறீர்கள் என்பதையும், அமைப்பு நிறுவனமாதல் என்பவற்றை நிராகரிக்கும் பின் நவீனத்துவம் எங்கனம் போராட வழிவகை செய்கிறது என்பதையும் விளக்குவீர்களா?

மேலும் இந்தப் பதிவையும் அதில் ஏன் பின் நவீனதுவம் கருதியல் ரீதியாக மார்சிசத்தை நிராகரிக்கிறது என்பது பற்றி ஓரளவு விரிவாக எழுதப்படுள்ளது, அவற்றிற்குமான பதில்களையும் எதிர் பார்க்கிறேன்.
http://aatputhan.blogspot.com/2008/03/blog-post_16.html

// மொத்தத்தில் அரசு, அரசியல், பொருளாதாரம் ஆகிய தளங்களில் மட்டும் அதிகாரத்தைப் புரிந்து கொள்வது சாத்தியமற்றது என்பது ஃபூக்கோவின் நிலை.
இந்தக் கருத்தாக்கம் எங்கு இட்டுச்செல்கிறது? அதிகாரம் எங்கும் பரவியிருக்கிறது என்கிறபோது அதற்கு எதிர்ப்பு என்பது ஒரு குறிப்பிட்டத் திட்டம் மூலம் செய்திட முடியாது. ஒரு ஒழுங்கு படுத்தப்பட்ட கட்சி என்ற வகையில் இந்த எதிர்ப்பை நிகழ்த்தினால், அதுவே ஒரு அதிகார நிறுவனம் ஆகிவிடும். எனவே, ஒழுங்குமய மாக்கப்பட்ட கட்சி போன்ற எந்த அமைப்பும் கூடாது என்பதே பின்நவீனத்துவவாதிகளின் நிலை. //

//மேற்கண்ட உரையாடலின்போது, தோழர் நல்லகண்ணு “உபரி மதிப்பு என்பதையே போ°ட்மார்டனிசத்தில் மறுக்கிறார்கள்” என்று கூறுகிறார். அதற்குப் பதில் கூறுகிறபோது, அ.மார்க்° “உபரி மதிப்பு என்கிற கோட்பாட்டை போ°ட்மார்டனிசம் மறுக்கிறது என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்...?” என்று கூறி தோழர் நல்லகண்ணுவின் கூற்றை மறுக்கிறார்.

அந்த நீண்ட விளக்கத்தின் இடையில், அவரே மேற்கண்ட நிலையிலிருந்து முரண்படுகிறார், அவர் கூறுகிறபோது... “வர்க்கம், இனம் என்றெல்லாம் மட்டும் பிரித்து இந்த உள்வித்தியாசங்களை (தலித், பெண்கள் போன்று) மறுக்கப்படுவதையும், மக்களை வித்தியாசங்களற்ற பொதுமைகளாகப் பார்த்து, எல்லோருக்குமான விடுதலை, புரட்சி போன்ற பெருங்கதையாடல்களை விவரிப் பதிலும் உள்ள பிரச்சனைகளை போ°ட்மார்டனிசம் சுட்டிக்காட்டுகிறது” என்கிறார் அவர்.
இதற்கு அர்த்தம் என்ன? மார்க்சியம் என்பது ஒரு பெருங்கதை யாடல் என்று பின்நவீனத்துவவாதிகள் கூறுகின்றனர். அதாவது, தொழிலாளியின் உழைப்பினால் உபரி மதிப்பு உருவாக்கப்பட்டு, முதலாளியின் லாபமும், அதையொட்டி மூலதன வளர்ச்சியும் ஏற்படுகிற நிகழ்வை தர்க்க ரீதியாகவும், அறிவியல் அடிப்படை யிலும் மார்க்சியம் விளக்குகிறது. இந்த மூலதனச் சேர்க்கை ஏற்படுத்தும் முரண்பாடுகள் வர்க்க மோதலாக, புரட்சியில் கொண்டு செல்கிறது என்கிற அறிவியல் நிகழ்வை ‘பெருங் கதையாடல்’ என்று முத்திரை குத்தி, மார்க்சியத்தை நிராகரித்த வர்கள் பின்நவீனத்துவவாதிகள். முற்றாக மார்க்சியத்தை நிராகரிக் கிறபோது உபரி மதிப்பையும் இந்தப் ‘பெருங்கதையாடலின்’ ஆதாரம் என்பதால் அதையும் நிராகரிப்பதாகத்தானே அர்த்தம்?
மார்க்சியத்தைப் பின்நவீனத்துவவாதிகள் நிராகரிக்கவில்லை என்று அ.மார்க்° சப்பைக்கட்டு கட்டுவது எந்த அடிப்படையில்? ‘வர்க்கம்’, ‘புரட்சி’, ‘வர்க்கப் போராட்டம்’ போன்ற அடிப்படை கருத்தாக்கங்களே மார்க்சியத்தின் ஜீவனாக இருக்கின்றபோது, அவற்றை மறுத்துவிட்டு எந்த மார்க்சியத்தோடு பின்நவீனத்துவம் உறவு கொள்கிறது? //

மார்க்சியம்,மற்றும் அறிவியல் இவை அனைத்தையும் வெறும் கதையாடல்களாக உருவகிக்கும் பின் நவீனத்துவம் என்னும் கோட்பாடு அறிவியலின் அடிப்படையான தத்துவ விசாரணைக்கு முற்றிலும் முரணானது என்னும் புள்ளியிலையே அதன் எல்லா சீர்கேடுகளும் சீரழிவுகளும் உதிக்கின்றன.அதனால் தான் பின் நவீனத்துவம் சாய் பக்தர்கள்,ஒசோவின் பக்தர்கள் முதல் பின் லாடான்,திண்ணை இந்துத்வா வாதிகள், போப் ஆண்டவர் என எல்லா மதவாதிகளாலும் ஆதர்சிக்கப்படுகிறது.

தமிழ் உலகில் அது செய்துள்ள தார்ப்பரியம் அல்லது சாதனை தான் என்ன?

மேலும் சரவணனுக்கு,
தமிழ்ல் தான் இவை உளறல்கள் என்று கருதப்படுவது இல்லை.அலன் சோக்காலின்
fashionable nonsense யும் Intelectual imposters யும் வாசித்தால் ,இந்தப்பின் நவீனத்துவம் என்பதை பிதற்றல் என்றே அவர்கள் பின் நவீனத்துவ சஞ்சிகை ஒன்றில் எழுதிய ஒரு போலிக் கட்டுரை மூலம் கட்டுடைத்த செய்தி தெரிய வரும்,
எனது இந்தப்பதிவை படிக்கவும்.

http://aatputhan.blogspot.com/2007/02/blog-post_20.html

PRABHU RAJADURAI said...

நான் தமிழ் வலையில் பங்கு கடந்த சில வருடங்களாக என்னை துரத்தும் இந்த வார்த்தை 'பின் நவீனம்'. இதனை தெரிந்து கொள்ள முயன்று நேரத்தை வீணாக்குவதேன் என்று இருந்தேன்...

ஏனெனில், வலையில் நான் சந்திக்கும் நபர்களைத் தவிர தினசரி வாழ்க்கையில் நான் சந்திக்கும் எவரும் இந்த வார்த்தையினை உபயோகப்படுத்தி பார்த்ததில்லை!

இன்று சில வரிகளில் ஓரளவு புரிந்து கொண்டது போல உள்ளது. நன்றி!


இதற்காக நான் மெனக்கெடாமல், தொடர்ந்து என் போக்கில் தமிழ் வலையில் மேயும் போக்கும் 'பின் நவீனம்தானோ'
நன்றி!!!

முபாரக் said...

//படிப்பவரின் பொன்னான நேரத்தை வீணாக்கக் கூடாது என்ற குறைந்தபட்ச வரையரையுடன்//

Very nice post and Quote :-)

"Nach" nu irukku

vaazhthukkal

முபாரக் said...

//படிப்பவரின் பொன்னான நேரத்தை வீணாக்கக் கூடாது என்ற குறைந்தபட்ச வரையரையுடன்//

இந்த வாசகத்துக்கு நேர்மையாவே பதிவும் இருக்கு.

வாழ்த்துக்கள். மேன்மேலும் சிறப்பாக எழுதுங்கள்.

அன்புடன்,
புது வாசகன்

சரவணன் said...

///மேலும் சரவணனுக்கு,
தமிழ்ல் தான் இவை உளறல்கள் என்று கருதப்படுவது இல்லை.அலன் சோக்காலின்
fashionable nonsense யும் Intelectual imposters யும் வாசித்தால் ,இந்தப்பின் நவீனத்துவம் என்பதை பிதற்றல் என்றே அவர்கள் பின் நவீனத்துவ சஞ்சிகை ஒன்றில் எழுதிய ஒரு போலிக் கட்டுரை மூலம் கட்டுடைத்த செய்தி தெரிய வரும்,
எனது இந்தப்பதிவை படிக்கவும்.

http://aatputhan.blogspot.com/2007/02/blog-post_20.html ///

அவசியம் படிக்கிறேன் அற்புதன். இத்தகவலுக்காக நன்றி.

சரவணன் said...

நன்றி பிரபு ராஜதுரை மற்றும் முபாரக்.

அப்புறம் முபாரக், 'வாழ்த்துக்கள்' என்பது சரியல்ல. 'வாழ்த்துகள்' என்பதே சரி. சமீபத்தில் சீமானின் 'வாழ்த்துகள்' பட விழாவில் "தமிழே" (கலைஞர், சீமானின் வார்த்தை)இதைத் தெளிவுபடுத்தியது. இதே போல 'படைப்புகள்' இத்யாதி...

தானமா வந்த மாட்டை பல்லைப் பிடுச்சு பதம் பார்த்துட்டேன் :-) தமிழில் நாம் செய்யற பிழைகளை நாமே ஒருவருக்கொருவர் சுட்டிக்காட்டினால் எல்லாரோட மொழியும் மேம்படும் என்று நான் கருதுவதால்... கோவிச்சுக்க மாட்டிங்களே!

ஜமாலன் said...

நண்பர்கள் மயூரன் மற்றும் அற்புதனுக்கு..

நீங்கள் முன்வைத்துள்ள உரையாடலுக்கான கேள்விகள் குறித்து எனது புரிதலை (பதிலை அல்ல) வாய்ப்பிருந்தால் தனிப்பதிவாக இடுகிறேன். தற்சமயம் ஏற்றுக்கொண்ட பணிகளால் இதில் கவனம் குவிக்க இயலவில்லை. தட்டச்சு செய்வதில் உள்ள அலுப்பும் ஒரு காரணம். இருப்பினும் உங்களைப்போல நானும் இந்த தேடலில் உள்ளவன்தான். இந்த உரையாடல் நமக்கு பயனுள்ளதாக அமையும் என்று நம்பகிறேன். கொஞ்சம் பொறுமை காக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

எற்கனவே பின்நவீனத்துவம் குறித்து 3 பதிவுகள் உள்ளன. வாய்ப்பிருந்தால் இதையம் பார்த்த வையுங்களேன். எதற்காகவாவது பயன்படும்.

http://jamalantamil.blogspot.com/2007/10/blog-post_09.html
http://jamalantamil.blogspot.com/2007/10/2.html
http://jamalantamil.blogspot.com/2007/10/3.html

நன்றி
அன்புடன்
ஜமாலன்

Unknown said...


//பின்நவீனத்துவத்தின் முக்கிய அம்சம், அது எந்த ஒரு குறிப்பிட்ட கொள்கையோ, கோட்பாடோ, சூத்திரமோ உலகைப் புரிந்துகொள்ள உதவும் என்பதை நிராகரிக்கிறது. இதை நாமும் நடைமுறையில் பார்க்கிறோம். நவீன கால சூத்திரப்படிப் பார்த்தால் இடதுசாரிகள் முதலாளிகளுக்கு எதிரானவர்கள். இன்றைய பின் நவீனத்துவ உலகிலோ, நந்திகிராமில் கம்யூனிஸ்டுகள் முதலாளிக்கு ஆதரவாக விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த, வலதுசாரியாக இருக்க வேண்டிய பாரதீய ஜனதா விவசாயிகளுக்காகப் போராடுகிறது! கம்யூனிஸ்டு நாடான சைனா தனியார் முதலீட்டில் முன்னிலையில் இருக்கிறது.//

மதுரை மல்லி தங்களது முயற்சி வெகுவாக பாராட்டப்பட வேண்டியது. அதே சமயம் சுரண்டும் வர்க்கத் தத்துவங்கள் எப்போதும் புதுவேடமிட்டு வந்துக் கொண்டே இருக்கும். அதனை ஆராயாமல் அலசாமல் அப்படியே ஏற்றுக் கொண்டு இங்கே வாந்தியெடுப்பது எந்த விதத்தில் நியாயம்?

தங்களது மேற்கண்ட கூற்றுக்களே இதற்கு சாட்சியாக விளங்குகிறது. பின் நவீனத்தும் உலகை புரிந்துக் கொள்ளும் எந்த தத்துவத்தையும் நிராகரிக்கிறது. நீங்கள் மேலே எழுதிய அனைத்தும் வெறும் கதையாடலகளே. அதன் உண்மையான உள்ளடக்கம் என்பது இந்த தத்துவப் பார்வையே!

அதாவது இதுவரை இருந்து வந்த தத்துவங்கள் எல்லாம் உலகை வியாக்கியானம் மட்டுமே செய்து வந்தன. ஆனால் பிரச்சினை என்னவென்றால் அதனை எப்படி மாற்றுவது என்பதுதான் என காரல் மார்க்ஸ் கேள்வி எழுப்பி முந்தைய தத்துவங்கள் அனைத்தையும் குப்பைக் கூடைக்குள் தள்ளிவிட்டார்.

மார்க்சியம் இந்த உலகின் கொடூரங்களை மட்டும் எழுதும் தத்துவமல்ல. அது மனித குலத்தின் மேன்மைக்காக - முழுமையான விடுதலைக்காக குரல் கொடுக்கும் தத்துவம். மனிதனை மனிதன் சுரண்டும் கொடுரத்திலிருந்து விடுதலை செய்தது மார்க்சியமே.

அதன் தத்துவ வீச்சி முதலாளித்துவத்தை திக்கு முக்காடச் செய்தது. திணச் செய்தது. இன்னும் முதலாளித்துவம் மூச்சு முட்டிக் கொண்டுதான் உள்ளது. (அமெரிக்க பொருளாதாரம்) ரஷ்யப் புரட்சியின் மூலம் மனித குலத்தை விடுவித்து சோசலிசத்தை நோக்கிய முதலாளித்துவ - ஏகாதிபத்திய சக்திகளுக்கு நிகராக வளர முடியும் என நிரூபித்தது.

இத்தகைய வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தை முடமாக்கும் தத்துவமே பின் நவீனத்துவம். ஒரு மனிதனை இன்னொரு மனிதன் சுரண்டுவதை வேடிக்கை பார்க்கும் பின்நவீனத்துவம் தேவையா? இது எப்படி மனித குலத்திற்கு பயனுள்ளதாக விடுவிக்கும்?

அடுத்து நாம் வாழும் பூமியை தட்டையானது என மத பழமைவாத நிலப்பிரபுத்துவ உலகம் சித்தரித்தது. இதனை விஞ்ஞான கண்கொண்டு - விஞ்ஞான தத்துவம் கொண்டு கோப்பர் நிக்கஸ். கலிலியோ போன்றவர்கள் உருண்டையானது என கூறினார்கள். அதே போல் டார்்வின் தத்துவம்தான் மனிதனின் தோற்றம் குறித்த முடிச்சை அவிழ்த்தது. இத்தகைய விஞ்ஞான கருத்துக்கள் மக்களை மடமையிலிருந்து விடுவித்தது. நீங்கள் என்ன கூறுகிறார்கள் என்றால் இதுபோன்ற கருத்துக்களை பின்பற்றாமல் இருக்க வேண்டும் அதுவே புனிதமானது என உரைக்கிறீர்கள்? அதாவது மனிதனை கற்காலத்திற்கே தள்ளுகிறீர்கள்! பரிதாபமான தத்துவம்.

சரி. அதை விடுவோம் மேற்குவங்கத்தில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொண்டுதான் எழுதியிருக்கிறீர்களா? இதிலிருந்தே தெரிகிறது உங்களது பின் நவீனத்துவம் எவ்வளவு பிற்போக்கானது என்று.

தயவு செய்து கீழ்க்கண்ட இணைப்பில் உள்ள கட்டுரையை படிக்க வேண்டுகிறேன்.


http://santhipu.blogspot.com/2008/03/blog-post_13.html

சரவணன் said...

பின்னூட்டத்துக்கு நன்றி reception committee.

// மனிதனை மனிதன் சுரண்டும் கொடுரத்திலிருந்து விடுதலை செய்தது மார்க்சியமே.//

இது எல்லாம் காகித அளவிலேயே சரி (only on paper). உண்மையில் இப்படி நடந்துவிட்டதா?

//ரஷ்யப் புரட்சியின் மூலம் மனித குலத்தை விடுவித்து சோசலிசத்தை நோக்கிய முதலாளித்துவ - ஏகாதிபத்திய சக்திகளுக்கு நிகராக வளர முடியும் என நிரூபித்தது.//

சோவியத் யூனியனும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் கம்யூனிசத்தைத் தூக்கி எறிந்து இன்றைக்குப் பதினெட்டாண்டுகள் ஆகின்றன நண்பர்களே. எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

//இன்னும் முதலாளித்துவம் மூச்சு முட்டிக் கொண்டுதான் உள்ளது. (அமெரிக்க பொருளாதாரம்)//

முதலியத்தின் (முதலாளித்துவம் என்ற மொழிபெயர்ப்பில் எனக்கு உடன்பாடு இல்லை) இயல்பிலேயே வளர்ச்சி - தேக்கம் என்பன மாறிமாறித்தான் வரும். இவற்றுடன் வாழ இன்றைய உலகம் பழகிவிட்டது.

// இத்தகைய விஞ்ஞான கருத்துக்கள் மக்களை மடமையிலிருந்து விடுவித்தது. நீங்கள் என்ன கூறுகிறார்கள் என்றால் இதுபோன்ற கருத்துக்களை பின்பற்றாமல் இருக்க வேண்டும் அதுவே புனிதமானது என உரைக்கிறீர்கள்? //

நான் எங்கே ஐயா அப்படிச் சொல்லியிருக்கிறேன்?!

// மேற்குவங்கத்தில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொண்டுதான் //

சீத்தாராம் யச்சூரியும், புத்ததேவும் புரிந்துகொண்டவர்கள் தானே? அவர்கள் கரண் தாப்பரிடம் பதில் கூற முடியாமல் தவிர்த்து, வியர்த்ததைப் பார்த்திருக்கிறேன். என்றாலும் உங்கள் சுட்டியையும் படிக்கிறேன்.

மற்றபடி நீண்ட கால நோக்கில், மக்களாட்சி, முதலியம், பேச்சுரிமை ஆகியவையே உலகுக்கு ஏற்ற கொள்கைகள் என்பது என் கருத்து. இவற்றில் எவ்வளவுதான் குறைகள் இருப்பினும் இவற்றைவிட சிறந்ததாக, நடைமுறையில் செயல்படக்கூடியதாக எந்த அமைப்புகளும் இல்லை. குடும்ப அமைப்பில் இல்லாத குறைகளா? இருப்பினும் குடும்பத்தைவிட சிறந்த அமைப்பு எதுவும் கண்டறியப்படவில்லை. அதேபோலதான் இதுவும்.


அறுபதுகளில் நம்மை விட ஏழையாயிருந்த கிழக்கு/தென்கிழக்காசிய நாடுகள் ஒரே தலைமுறையில் வறுமையை ஒழித்துக்கட்டியுள்ளன. நாமும் அதைச் செய்ய ஆண்டுக்கு 10 சதவீதம் வளர வேண்டும். அதற்கு ஏராளமான முதலீடு தேவை: அரசு, தனியார், உள்நாடு, வெளிநாடு என எல்லாப்பக்கமிருந்தும்தான். குடியரசாகி முதல் 40 ஆண்டுகள் சோஷலிசத்துக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அக்காலத்தில் உங்கள் இடதுசாரித் தோழர்களே 'பஞ்சம், பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம்' என்று தெருவில் முழக்கமிட்டுச் செல்வார்கள். அப்படிதான் நாடு இருந்தது.

தளைநீக்கம் (liberalisation) ஆரம்பித்து 20 ஆண்டுகள் கூட ஆகவில்லை. ஒரு 30 ஆண்டுகளாவது சந்தர்ப்பம் அளித்துவிட்டுப் பிறகு பாருங்கள்.

கடைசியாக ஒன்று: கதையாடல் என்ற சொல் எனக்குப் புரியவில்லை. அதற்கான ஆங்கிலச்சொல் கூறினால் நலம். 'கட்டுக்கதை' என்று சொல்லவந்தால் அப்படியே சொல்லுங்களேன். குழப்பம் தவிர்க்கப்படுமல்லவா? சொல்லாடல் என்பதை narrative என்று புரிந்துகொள்கிறேன். இச்சொல்லைக் குறிப்பதாக இருந்தால் சொல்லாடல்/விவரணை என்ற சொற்களை உபயோகிக்கலாம்.

Anonymous said...

உதாரணங்கள் அருமை :) :)

சரவணன் said...

வாங்க புரூனோ. உங்கள் வருகை மற்றும் பாராட்டுக்கு நன்றி. இவ்விடுகைக்கான பின்னூட்டங்கள் மூன்று விதமாக உள்ளன.

1) பாராட்டியுள்ளவர்கள்: நன்றிகள் பல. இதற்குக் கிடைத்த வரவேற்பு, சூடான இடுகைகளிலும், வாசகர் பரிந்துரையிலும் இடம்பெற்றது ஆகியவை இப்படியான ஒரு இடுகைக்கு அவசியம் இருந்ததையே காட்டுவதாகக் கொள்கிறேன்.

2) சரிதான், ஆனால் பின்நவீனத்துவத்தில் இன்னும் நிறைய உள்ளது என்று இடுகையின் போதாமையைச் சுட்டியுள்ளவர்கள்: இது அறிமுகம் என்றே தலைப்பில் குறிப்பிட்டுள்ளேன். பின்நவீனத்துவம் என்ற வார்த்தையை அடிக்கடி கண்டு, ஆனால் அப்படியென்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலையில் இருப்பவர்களுக்கான (இதைக் கேலியாகக் கூறவில்லை; எல்லாமும் தெரிந்தவர் யாருமில்லை) ஒரு துவக்கப் புள்ளி. அவ்வளவே.

3) நான் எழுதியிருக்கும் விதத்தில் குறை காணாமல், அதேசமயம் பின்நவீனத்துவம் என்கிற விஷயத்தையே எதிர்த்துள்ளவர்கள்: நான் பின்நவீனத்துவத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறவில்லையே. அவரவர் கருத்து அவரவருக்கு. எல்லோரும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தால் உலகம் ரொம்ப போரடிக்கும் என்ற cliche -ஐக் கூற விரும்புகிறேன்.